Yoosuf Mufthi
30/05/2026
தியாகத் திருநாளின் மகிழ்ச்சி; மூன்று குடும்பங்களுக்கு வீடுகள்
அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது.
மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை போன்றவற்றுடன் பாதுகாப்பான ஒரு வீடும் மிக முக்கியமானதாகும். அதனால்தான் அல்லாஹ் தனது அருட்கொடைகளைப் பற்றி கூறும்போது:
﴿وَاللَّهُ جَعَلَ لَكُم مِّن بُيُوتِكُمْ سَكَنًا﴾
“அல்லாஹ் உங்கள் வீடுகளை உங்களுக்கு அமைதியும் நிம்மதியும் தரும் இடமாக ஆக்கியுள்ளான்.” என்று குறிப்பிடுகின்றான்.
இஸ்லாத்தின் பார்வையில் வீடு என்பது வெறும் கல், மண், மரம், சீமெந்து அல்லது இரும்பினால் கட்டப்பட்ட கட்டிடம் மட்டுமல்ல. உலகின் பல பகுதிகளில் மக்கள் தங்களது சூழல், கலாசாரம் மற்றும் பொருளாதார நிலைக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் வீடுகளைக் கட்டுகின்றனர். ஆனால் வீட்டின் உண்மையான பெறுமதி அதன் வெளிப்புற அமைப்பில் அல்ல; அது நிறைவேற்றும் பணியில்தான் உள்ளது.
வீடு என்பது மனிதனை உருவாக்கும் முதல் நிறுவனம். ஒரு குழந்தையின் ஒழுக்கம், பண்பாடு, நம்பிக்கை, சமூகப் பொறுப்பு, கல்வி மற்றும் வாழ்க்கை நோக்கம் ஆகியவை முதன்முதலில் வீட்டிலிருந்தே உருவாகின்றன. அதனால் வீடு என்பது ஒரு குடும்பம் தங்கும் இடம் மட்டுமல்ல; அது மனித வளத்தை உருவாக்கும் மையமாகும்.
நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வாழ்க்கையிலும் வீட்டின் முக்கியத்துவம் தெளிவாகக் காணப்படுகிறது. அவர்களுடைய ஒவ்வொரு மனைவிக்கும் தனித்தனி இருப்பிடங்கள் இருந்தன. அல்லாஹ் அவர்களின் இல்லங்களைப் பற்றி:
َاذْكُرْنَ مَا يُتْلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ
“உங்கள் வீடுகளில் ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும் ஞானத்தையும் நினைவுகூருங்கள்.” என்று கூறுகின்றான்.
இதன் மூலம் வீடு என்பது அறிவு, ஆன்மீகம் மற்றும் நற்பண்புகள் வளர்க்கப்படும் இடம் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.
ஒரு நல்ல வீடு பல பொறுப்புகளை நிறைவேற்றுகிறது. அது அமைதி மற்றும் ஓய்வுக்கான இடமாகவும், பிள்ளைகளின் முதல் பாடசாலையாகவும், தொழுகை மற்றும் குர்ஆன் ஓதலுக்கான ஆன்மீக மையமாகவும், முதியோர்களைப் பராமரிக்கும் இடமாகவும், விருந்தினர்களை வரவேற்கும் பண்பாட்டு மையமாகவும் விளங்குகிறது.
எனவே, ஒரு ஏழைக் குடும்பத்திற்கு வீடு அமைத்துக் கொடுப்பது என்பது வெறும் சுவர்களைக் கட்டுவது அல்ல. அவர்களுக்கு பாதுகாப்பையும், மரியாதையையும், எதிர்கால நம்பிக்கையையும் வழங்குவதாகும்.
இந்த உயர்ந்த மனிதநேய நோக்கத்துடன் ஸம் ஸம் பவுண்டேஷன் பல ஆண்டுகளாக பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பணியின் மூலம் ஸம் ஸம் பவுண்டேஷன், உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கும் உதவ விரும்பும் நன்கொடையாளர்களுக்கும் இடையே ஒரு நம்பகமான பாலமாக செயல்பட்டு வருகிறது.
இதுவரை நிர்மானித்த வீடுகளில் பல குடும்பங்கள் பாதுகாப்பான வீடுகளில் வாழ்கின்றன என்றால், அதற்குக் காரணம் அல்லாஹ்வின் அருளும், நன்கொடையாளர்களின் தாராள
மனப்பான்மையும்தான். அவர்கள் வழங்கிய ஒரு வீட்டின் மூலம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையே மாற்றமடைகிறது.
இன்று நாம் துல்ஹஜ் மாதத்தின் புனிதமான தஷ்ரீக் நாட்களில் இருக்கின்றோம். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இந்த நாட்களை “உண்பதும், பருகுவதும், அல்லாஹ்வை நினைவுகூர்வதுமான நாட்கள்” என்று வர்ணித்துள்ளார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், பாதுகாப்பான ஒரு வீட்டிற்காக இன்னும் காத்திருக்கும் ஏழை குடும்பங்களை நாம் நினைவுகூருகின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்,இன்று மூன்று வறிய குடும்பங்களுக்கான வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. And இந்த வீடுகள் அவர்களுக்கு வெறும் தங்குமிடங்களாக அல்லாமல், அமைதி, பாதுகாப்பு, மரியாதை மற்றும் நம்பிக்கையின் இல்லங்களாக அமைய வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம்.
இந்த நற்பணிக்கு பங்களித்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். அல்லாஹ் அவர்களின் செல்வத்திலும், குடும்பத்திலும், வாழ்விலும் பரக்கத் செய்வானாக. அவர்கள் செய்த இந்த உதவியை நிலையான ஸதகா ஜாரியாக ஏற்றுக்கொண்டு, மறுமையில் சுவனத்தில் அழகிய இல்லங்களை அவர்களுக்கு வழங்குவானாக.
وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا
“நீங்கள் உங்களுக்காக முன்வைக்கும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்ததாகவும் மகத்தான கூலியாகவும் பெற்றுக்கொள்வீர்கள்.”
அல்லாஹ் இந்த வீடுகளை அவற்றில் வாழும் குடும்பங்களுக்கு அமைதி, சாந்தி மற்றும் பரக்கத் நிறைந்த இல்லங்களாகவும் ஆக்குவானாக.
ஆமீன்.
இப்ராஹீம் நபியின் வாழ்க்கை பெற்றோரின் வாழ்க்கையே பிள்ளைகளின் வாழ்வின் பிரதிபலிப்பு |ஜும்ஆ உரை: முப்தி.யூஸுப் ஹனிபா| 29.05.2026
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
Colombo