Qrius Learning Initiatives
Qrius works with schools to promote child-friendly literacy and numeracy education
22/03/2026
வகுப்பறை எப்போது குழந்தைகளுடையதாகிறது?
எம். எம் சுரேந்திரன் எழுதிய புத்தகம்
தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் மலையாளப் புத்தகத்தின் பெயரைத் தமிழாக்கம் செய்தால் "எப்போது வகுப்பறை குழந்தைகளுடையதாகிறது?" என்று கிடைக்கும். 1994 முதல் காசரகோடு, கண்ணூர் மாவட்டங்களில் துவக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த திரு எம். எம் சுரேந்திரன் தான் ஆசிரியர்.
அப்புத்தகத்திலிருந்து ஒரு காட்சியை நம்முடைய துவக்கப்பள்ளி ஆசிரியர்களின் மனத்தில் பதிய வைக்கும் முயற்சியே இப்பதிவு. முதலில் புத்தகத்தில் தந்துள்ள ஓரிரு காட்சியைப் பார்ப்போம். பிறகு அதைப் பற்றி அலசுவோம்.
முதல் வகுப்பு, முதல்தர வகுப்பு என்ற தலைப்பின் கீழ் இந்நிகழ்வு இடம்பெறுகிறது.
இது அவர் நடத்திய வகுப்பின் நேரடிப் பதிவு
ஓநாய் கோழியைப் பிடிக்க வருவதும் அப்போதும் ஏற்படும் குழப்பங்களும் கோழிக்கு உதவ வரும் நண்பர்களும் என கதையைக் குழந்தைகள் உருவாக்குகிறார்கள். ஆனால் ஆசிரியரிடம் அவர்கள் ஒரு நிபந்தனை விதித்துள்ளனர். அது கதை உருவாக்கி முடிந்தால் அதை ஒப்பனையோடு நடத்துக்காட்ட வாய்ப்பளிக்க வேண்டும். அவர் அதற்கு ஒத்துக்கொள்கிறார்.
குழந்தைகள் குழுவாக அமர்கிறார்கள். கதை உருவாக்குகிறார்கள். கதாபாத்திரங்கள் பேசு வேண்டிய வசனங்களை எழுதுகிறார்கள். (ஆம் ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் தாம் வசனங்கள் எழுதுகிறார்கள்.) பிறகு கதாபாத்திரங்களை முடிவு செய்கிறார்கள். பேச வேண்டிய வசனங்களைப் பேசிப் பார்த்து பழகுகிறார்கள்.
அங்கங்கு ஓடி வந்து இந்த சொல்லை எப்படி எழுத வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆசிரியர் தம் குறிப்பேட்டில் எழுதிக் காட்டுகிறார்.
வகுப்பறை பொருட்கள் வீடாகவும் கூடாகவும் மாறுகிறது. குழந்தைகள் கதாபாத்திரங்களாக மாறுகிறார்கள். நாடகம் அரங்கேறுகிறது.
அடுத்த காட்சிதான் எனக்கு மிகவும் பிடித்தது.
இணையத்தில் தேடியபோது ஒரு படம் கிடைத்தது. ஒரு பூவின் படம். எந்தப் பின்னணியும் இல்லை. யாரோ ஒரு குழந்தை வரைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
அதைக் குழந்தைகளுக்குக் காட்டினேன். எவ்விதப் பின்னணியும் இல்லாத ஓர் ஒற்றைப் பூவின் படம் எப்படி அழகான செயல்பாடாக மாறுகிறது.
விளையாட யாரும் இல்லாமல் தனியாக இருக்கும் ரோஜாப் பூ. அப்போது ஒரு புழு வந்தது. ரோஜாப் பூச்செடியின் இலையைக் கடித்துத் தின்றது. அப்போது ஒரு காகம் வந்தது. புழுவைக் கொத்தித் தின்றது. பிறகு தன் வீட்டுக்குப் போனது.
ஆதிதேவ் என்ற மாணவன் எழுதிய கதை இது. இவர் பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட, தான் நினைப்பதைப் பகிர்ந்துகொள்ள தயங்கி நிற்பவர். முதலில் எழுத சற்றுச் சிரமப்பட்டவர் இப்போது சரளமாக எழுதுகிறார்
அவருடைய சுயஅனுபவம்தான் கதையாக வெளிப்பட்டுள்ளது. ஆதிதேவைப் போலவே வேறு குழந்தைகளும் கதை எழுதத் தொடங்கியுள்ளனர்.
நாளும் கதை எழுத வேண்டும். ஒப்பனையோடு நாடமாக மாற்ற வேண்டும். எழுதத் தெரியாவிட்டால் எப்படி கதை வசனம் எழுதுவது? எழுத்து குழந்தைகளின் தேவையாக மாறிய பல செயல்பாடுகளில் ஒன்றை இங்கே தருகிறேன்.
பூவின் படத்தைக் காட்டி
"இந்தப் பூ உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?"
"ம்... நல்ல பூ"
"இந்தப் பூ எங்கே இருக்கிறது?"
"பூந்தோட்டத்தில் இருக்கலாம்."
"இல்லை ஐயா, அதொரு பள்ளிக்கூடத்தின் முன்னால் நிற்கிறது."
"பள்ளி செல்லும் வழியருகில்"
"ஒரு வீட்டின் முன்னால்"
"அல்ல. ஒரு காட்டில்"
"இதெல்லாம் தவறு. இந்தப் பூ ஒரு குளக்கரையில் நிற்கிறது. குளத்தில் வாழும் தவளைதான் இப்பூவின் நண்பன்."
மெல்ல ஒரு கதை உருவாகத் தொடங்கிவிட்டது.
அடுத்த ஒரு கேள்வியையும் கேட்டேன்.
"இந்தப் பூ மகிழ்ச்சியாக இருக்கிறதா? கவலையாக இருக்கிறதா?"
"கவலையாக இருக்கிறது."
ஒட்டு மொத்த வகுப்பும் ஒரே குரலில் சொன்னது.
கொஞ்சம் பேர் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கொஞ்சம் பேர் கவலையாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள் என்ற என் கணிப்பு தவிடுபொடியானது. இப்படி நம் கணிப்பு தவிடுபொடியாகும்போது நீங்கள் குழந்தைகளுடன் சரியான வழியில் உறவாடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தலாம்.
"ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?"
"பூவுக்குச் சுற்றும் பாருங்கள். கறுத்த புள்ளிகளைப் பார்த்தீர்களா... அது கவலையாக இருப்பதால்தான் கறுத்த புள்ளிகளை இட்டுள்ளது."
எல்லோரும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
"ஏன் அது கவலைப்படுகிறது?"
குழந்தைகள் யோசனைகள் மூழ்கினார்கள்.
"இனி யாரும் உரக்கச் சொல்ல வேண்டாம். குழுவாக அமர்ந்து கதையெழுதுங்கள்."
"கதை எழுதிமுடித்ததும் நடித்துக்காட்ட வாய்ப்புத் தரவேண்டும் என்பதை மறைந்துவிடாதீர்கள்."
மூவர் கொண்ட குழுக்களாக அமர்கிறார்கள். பூவுக்குப் பெயர் சூட்டுகிறார்கள். பூக்குட்டி.
பூக்குட்டி பூந்தோட்டத்தில் இருக்கிறது. அவளுக்குத் தோழிகள் யாரும் இல்லை. அதனால் பூக்குட்டி கவலைப்பட்டாள். பூக்குட்டியின் கவலையைக் கண்டு பட்டாம் பூச்சி வந்தது. இனிமேல் நான்தான் உன் தோழி. பூக்குட்டியிடம் சொன்னது. பூக்குட்டி சிரித்தாள்.
குளக்கரையில் பூ வசித்து வந்தது. பூவுக்குத் தாகம் எடுத்தது. குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும். தண்ணீர் இல்லாவிட்டால் நான் செத்துவிடுவேன். பூ அழுதது. குளத்திலுள்ள தவளை அழுகைச் சத்தத்தைக் கேட்டது. தவளை ஒரு குடுவையில் தண்ணீர் கொண்டு வந்தது. செடிக்கு அடியில் ஊற்றியது. பூ மகிழ்ந்தது.
சற்று வேறுபட்ட கதை
ஒரு காற்று வந்தது. பூக்காரனின் பூக்கூடையிலிருந்த ஒரு பூ கீழே விழுந்தது. பூ அழுதது. அப்போது மழை வந்தது. அந்தப் பூ ஒரு செடியாக மாறியது. அடுத்த நாள் பூக்காரன் வந்தான். பூ பறித்தான். கூடையில் வைத்தான். கடைக்குப் போனான்.
வேறுபட்ட பல கதைகள் இன்னும் இருக்கின்றன. இடப்பற்றாக்குறை, நேரப்பற்றாக்குறை கருதி அவற்றைப் பற்றி கூறவில்லை.
அப்புறம் என்ன...?
கதையை வகுப்பில் வாசிக்கிறார்கள்.
யார் யார் எந்தெந்த வசனம் பேசவேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். மேசை கடையாக மாறுகிறது. இரண்டு கைகளை தலைமேல் வைத்து கூடைசெய்கிறார்கள்...
நாடகத்தின் அரங்கேற்றம் நடக்கிறது.
*********************************************************************************************
இந்த நிகழ்ச்சியை அலசிப் பார்ப்போமா?
ஒப்பனை செய்து, கதை மாந்தர்களாக மாறி, நாடகம் நடிப்பது குழந்தைகளுக்குப் பிடித்துள்ளது. அந்த விருப்பத்தை எழுத்துச் செயல்பாடாக, வாசிப்புச் செயல்பாடாக மாற்றுகிறார் ஆசிரியர். எப்படி?
• ஆசிரியர் கதையைத் தேர்ந்தெடுக்கவில்லை.
• குழந்தைகளே கதை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்குகிறார்.
• கதையை எழுதச் சொல்கிறார்.
• எழுதிய கதையை வாசிக்கிறார்கள்
• அதன் அடிப்படையில் கதாபாத்திரங்களை முடிவு செய்கிறார்கள்.
• வசனம் எழுதுகிறார்கள்.
• ஒத்தி்கை பார்க்கிறார்கள். நடிக்கிறார்கள்.
இப்படிநிலைகளுள் குழந்தைகளிடம் கதை எழுதச் சொல்வதுதான் மிக மிக முக்கியமான முடிவு. குழந்தைகளுக்கு எழுதத் தெரியுமா? அந்த எழுத்து தெரியுமா? இந்த எழுத்தை நான் இதுவரை கற்பிக்கவில்லையே என்றெல்லாம் அவர் .யோசிக்கவில்லை. நாடகம் நடிக்க கதை எழுத வேண்டும். அவ்வளவுதான். கதை எழுதுவது குழந்தைகளின் தேவை. தெரியாவிட்டால் அவர்கள் வந்து கேட்பார்கள். அப்போது உதவினால் போதும்.
நாம் தற்போது வகுப்பில் நடைமுறைப்படுத்துவது போல் ஓர் எழுத்தை அறிமுகப்படுத்த ஒரு பாடம் அந்த எழுத்தை பல முறை பார்க்க, எழுத பல பக்கங்கள். வலுவூட்ட பல செயல்பாடுகள் என்ற படிநிலைகள் இல்லை.
அவர்களுக்குத் தேவைப்பட்டால் அவர்கள் எழுதுவார்கள். அவ்வளவுதான். ஆனால் அதற்கு உதவுவதற்காக ஆசிரியர் நாட்குறிப்பு எழுதுவார், பாடல் எழுதியிருப்பார், உரையாடல் எழுதியிருப்பார். இங்கெல்லாம் கதைக்கருதான் முக்கியம் கருத்துத்தான் முக்கியம். பொருள் பொதிந்த சூழல்தான் முக்கியம்.
இதைத்தான் கருத்துப் பரிமாற்ற முறை என்கிறோம். (Whole Language Approach) நம் மொழியியல் வல்லுநர்கள் எழுத்துகளை அடுக்கி வைத்த அதே முறையில் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எழுத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முறையை அவர் பின்பற்றவில்லை. சுரேந்திரன் அவர்கள் நடைமுறைப்படுத்தியதைத்தான் நாம் குழந்தை மையம் என்று இத்தனை காலமாகச் சொல்லி வந்திருக்கிறோம். அது வகுப்பறையில் எப்படி அமலாக்கப்படும் என்பது அறியாமலே..)
குழந்தைகளால் கதை உருவாக்க முடியுமா? அவர்கள் ஒன்றாம் வகுப்பு தானே. பெரியர்களான நாம் தானே கற்றுக்கொடுக்க வேண்டும். முதலில் நாம் நிறைய கதைகள் சொல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களால் கதை சொல்ல முடியும்... அப்பப்பா... எத்தனை எத்தனை நியாயங்கள் நாம் சொல்லியிருக்கிறோம். சுரேந்திரன் குழந்தைகளை நம்புகிறார். வாய்ப்பளிக்கிறார். அவ்வளவுதான். அது ஒரு வரிக்கதையாக இருக்கலாம். பிறகு அது பெரியதாக மாறலாம். இதைத்தான் நாம் ஆக்கவியம் (Constructivism) என்கிறோம். சில்வியா ஆஷ்டன் வார்னர் எழுதிய The Teacher என்ற புத்தகத்தில் விவரித்துள்ள முறை. துவக்க வகுப்புக் குழந்தைகளுக்காக அமெரிக்காவில் அச்சிடப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில் கற்பிக்கத் தொடங்கிய சில்வியா தோற்றுப் போய் மாவோரிக் குழந்தைகளிடம் நான் உங்களுக்காக எழுதப்போகிறேன் என்ன எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்ற கேட்டதிலிருந்து ஆக்கவியம் உருவெடுக்கிறது.
நேரம் கிடைக்கும்போது புத்தகத்திலுள்ள பிற கருத்துகளைப் பார்க்கலாம்.
ஜி. ராஜேந்திரன்
30/01/2026
மலையாளத்திலிருந்து...
நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளின் கற்பனையாற்றலை விரிவுபடுத்த வேண்டும் என்று எனக்குள் ஓர் ஆவேசம் தள்ளும். அதற்குச் சிறந்த வழி கதைதானே....
அப்புறம்...
"அப்படி நம் முயல்குட்டி அம்மா முயலிடம் சொன்னது. நான் காட்டின் அரசனாக வேண்டும்."
ஒரு முன்னிருக்கை எழந்து நின்றது.
"முயல்குட்டி அதுதான் சொல்லிச்சுண்ணு உங்களுக்கு எப்படித் தெரியும்? அவங்கெல்லாம் தமிழிலா பேசுவாங்க...?"
"அல்லல்ல... விலங்குகள் எல்லாம் அவங்க மொழியில்தான் பேசுவாங்க. அந்த மொழி எனக்கும் உனக்கும் புரியாது. ஆனால் கதை எழுதுபவர்களுக்குப் புரியும். அப்படித்தான் இத்தனை கதைகள் உருவாகுது..."
என் பதில் அவருக்கு அவ்வளவு மனநிறைவு அளித்தது என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் இருக்கையில் அமர்ந்துகொண்டார். தற்காலத்துக்கு நான் தப்பித்தேன்.
நான் ஓரக்கண்ணால் பார்த்தேன். இருக்கையின் நுனியில்தான் இப்போதும் அமர்ந்திருக்கிறார். எந்த நிமிடத்திலும் அடுத்த கேள்விக்கணை அவரிடமிருந்து எய்யப்படலாம்.
"கடவுளே என்னைக் காப்பாற்று" என்று முணுமுணுத்தபடி கதைக்குள் குதித்தேன்.
"அம்மா முயல் முயல்குட்டியோடு சொன்னது. மகனே. நாம் எல்லாம் சிறிய விலங்குகள். நம்மால் இத்தனை பெரிய காட்டின் அரசனாவது எல்லாம் நடக்காத காரியம். அதைக்கேட்ட முயல் குட்டி சொன்னது. எனக்கு நல்ல அறிவு இருக்கிறது. அதைப் பயன்படுத்தி நான் அரசனாவேன்."
முன்னிருக்கை பட்டனைத் தட்டிவிட்டதுபோல் சட்டென எழுந்தார்.
"முயல் குட்டிக்குப் பைத்தியம் பிடிச்சிண்ணு நெனக்கிறேன். யானை ஒரு மிதி மிதிச்சா அது சட்னியாகிடும். அப்புறம் சிங்கம் கடலை மிட்டாய் சாப்பிடுவது போல் அதைச் சாப்பிடலாம்."
"ஹ ஹ் ஹா..." வகுப்பு மொத்தமும் சிரித்தது.
அவரோ பாகுபலி போல் மார்பை விரித்து நின்றுகொண்டிருந்தார்.
அந்த வகுப்பிலுள்ள தந்திரசாலி குழந்தை எழுந்து வந்து இச்சூழலை எப்படி சமாளிப்பது என்பதற்கான ஒரு வழியை என் காதில் சொன்னது.
"டீச்சர் அவன வெளயாடப் போகச்சொல்லங்க... அவன் போனதக்கப்புறம் நாம் கதை சொல்லலாம்..."
"ஆகா.. அருமையான ஐடியா... நான் முன்னிருக்கை குழந்தையிடம் கேட்டேன்.
"உங்களுக்கு வெளயாடப் போகணுமா?"
அவர் ஒரு நொடி யோசித்தார். அப்புறம் "வேண்டாம் வேண்டாம் இங்கேயே இருந்துக்கறேன். அதான் நல்லாருக்கு..."
அதாவது என் கதையைக் கிழித்துத் தொங்கவிட்டுட்டுத்தான் அவர் அடங்குவார் போல...
நான் வேறு வழியில்லாமல் மீண்டும் கதைக்குள் குதித்தேன்.
"அம்மா முயல் முயல்குட்டியின் காதில் ஒரு வழி சொன்னது. காட்டின் அரசனாவதற்கான இரகசியம். அந்த இரகசியம் என்னவாக இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும்?"
"ஓஹோ... அப்படீண்ணா இது கேட்பதற்கான கதையல்ல. எங்கள பேச வைப்பதற்கான கதையா...?"
அவர் கையால் வாயை மூடி உள்ளுக்குள் சிரித்தார்.
"இந்தக் கதை வேண்டாம். நாங்க சும்மா கேட்கிறோம். அதற்குத் தகுந்த கதை சொல்லுங்க..."
குழந்தைகள் மொத்தமாக அவர் கருத்துக்கு வழிமொழிந்தனர்.
அந்த தந்திரசாலி மீண்டும் என் காதில் ஓர் இரகசியம் ஓதினார்.
"நாளைக்கு அவனோட அத்தைக்குக் கல்யாணம். அவன் லீவெடுப்பான். அப்போ நாம கத சொல்லுவோம். இப்ப சொல்ல வேண்டா..."
"என் ராசா... இந்த மாதிரி தந்திரமெல்லாம் சொல்லித்தர நீயில்லாவிட்டால் என் நிலைமை என்னவாகியிருக்கும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது."
அதற்குள் மணிச்சத்தம் கேட்டது.
"அம்மா முயல் முயல் குட்டியின் காதில் சொன்ன இரகசியம் என்னாண்ணு நாளைக்கு யோசிட்டு வாங்க. நானும் யோசிக்கிறேன்." நான் கற்பனையாற்றலை விரிவுபடுத்தும் வகுப்பை முடித்தேன்.
"அப்புறம் நாம் எல்லாரும் முயல் குட்டியின் வீட்டுக்குப் போய் நாம யோசிச்ச இரகசியத்தைச் சொல்லலலாம்." முன்னிருக்கைக் குழந்தையும் என் கற்பனை வகுப்பின் முடிவு விழாவில் பங்குகொண்டார்.
இவரை உண்டு இல்லைண்ணு...
நான் கண்களை உருட்டுவதற்கு இடையே அவன் டோம் அண்டி ஜெரி காட்டூணில் வரும் ஜெர்ரியைப் போல ஒரு நொடிக்குள் ஓடி மறைந்தார்.
அந்த தந்திரசாலி எனக்கு இப்படி ஆறுதல் கூறினார்.
"நீங்க நாளைக்கு எங்க கிட்ட கேள்வி கேட்காத, சும்மா கேட்கறதுக்கான கதை சொல்லுங்க. அப்போ அவன் எதுவும் கேட்கமாட்டான். பிரச்சனை இருக்காது."
"போங்கடா... நீங்களும் உங்க கற்பனையும்."
எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். கற்பனையை விரிவுபடுத்த வந்த ஆவேசம்... மண்ணாங்கட்டி.
அந்த நேரம் என் குலகுருவின் அருள் வாக்கு நினைவுக்கு வந்தது.
(இது சில வருடங்களுக்கு முன்பு வைரலான ஒரு சிறுவனின் காணொளியில் அவர் கூறிய வாக்கியம். ஒரிகாமி செய்வதற்காக தாளெடுத்து ஏதோ செய்வார். ஆனால் அது சரியாகவில்லை. அப்போது அவர் சொன்னது இது. அன்று நிறையப் பேர் அக்காணொளியைப் பகிர்ந்துகொண்டனர்.)
"கொஞ்சம் பேருக்குச் சரியாகும், கொஞ்சம் பேருக்குச் சரியாகாது"
அவ்வளவுதான். இதுக்குப்போய்....
மிக்க நன்றி குரு...
இவங்களுக்கிடையே நிண்ணு பொழைக்கணும்னா நீங்கதான் காப்பாத்தணும்...
வி. கெ. தீபா.
PC: The Indian School
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
14/34, Selvalakshmi Garden, Subramaniyam Palayam G. N Mill Post
Coimbatore
641029